Monday, February 24, 2014

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு !!


சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார். இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர். தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் மெக்கா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் வாலிபர் சம்பவத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இல்லை. குடிபோதையிலோ, போதை பொருட்களையோ எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல மனநிலையில்தான் இருந்துள்ளார் என்று போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி துர்கி அல்காமி பிறப்பித்த உத்தரவில், தாயாரை அடித்து பல்லை உடைத்த மகனுக்கு 2400 சவுக்கடிகள் கொடுக்க உத்தரவிட்டார். தாயாரை தாக்கிய குற்றத்திற்காக தண்டனையின் ஒரு பகுதியாக 10 நாட்களுக்கு தினமும் 40 சவுக்கடியை பொது இடத்தில் வைத்து அவருக்கு வழங்க வேண்டும். மேலும் இவர் தாக்கியதால் தாய்க்கு எந்த பல் உடைந்ததோ வாலிபரின் அதே பல்லையும் உடைக்க வேண்டும். மேலும் வாலிபர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த சம்பவம் சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

தனது பிறந்தநாளையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

அதேவேளையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பிறகு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்றார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

1.திருவள்ளூர் (தனி)- பி.வேணுகோபால்

2.வேலூர் – செங்குட்டுவன்

3.சேலம்- வி.பன்னீர்செல்வம்

4.தென் சென்னை- ஜெயவர்த்தன்

5.மத்திய சென்னை- விஜகுமார்

6.தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி

7.தென்காசி (தனி)- வி.சாந்தி முருகேசன்

8.திருநெல்வேலி- பிரபாகரன்

9.கன்னியாகுமரி- ஜான் தங்கம்

10.விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன்

11.சிதம்பரம் (தனி)- சந்திரகாசி

12.மயிலாடுதுறை- பாரதி மோகன்

13.நாகப்பட்டினம் (தனி)- கோபால்

14.காஞ்சிபுரம்(தனி)- மரகதம் குமரவேல்

15.மதுரை- கோபாலகிருஷ்ணன்

16.தேனி- பார்த்திபன்

17.விருதுநகர்- ராதாகிருஷ்ணன்

18.ராமநாதபுரம்- அன்வர்ராஜா

19.அரக்கோணம்- கோ.அரி

20.கிருஷ்ணகிரி- அசோக்குமார்

21.வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்

22.ஸ்ரீபெரும்புதூர்- ராமச்சந்திரன்

23.தர்மபுரி- மோகன்

24.திருவண்ணாமலை- வனரோஜா

25.ஆரணி- ஏழுமலை

26.கள்ளக்குறிச்சி- காமராஜ்

27.நாமக்கல்- சுந்தரம்

28.ஈரோடு- செல்வகுமார் சின்னையன்

29.திருப்பூர்- சத்யபாமா

30.கோவை- நாகராஜன்

31.நீலகிரி (தனி) – கோபாலகிருஷ்ணன்

32.பொள்ளாச்சி- மகேந்திரன்

33.திண்டுக்கல்- உதயகுமார்

34.கரூர்- தம்பிதுரை

35.திருச்சி- ப.குமார்

36.பெரம்பலூர்- மருதை ராஜன்

37.கடலூர்- அருண்மொழி தேவன்

38.தஞ்சை- பரசுராமன்

39.சிவகங்கை- செந்தில்நாதன்

40.புதுச்சேரி- எம்.வி.ஓமலிங்கம்

அதிமுகவின் முதன்மை இலக்கு:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக சார்பில் பிரதமர் பதவிக்கு நான் முன்னிறுத்தப்பட்டாலும், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் முதன்மையான இலக்கு.

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்படும்போது கட்சியின் தேர்தல் பிரச்சார மையக்கருத்து என்ன என்பது தெரிவிக்கப்படும்.

ஆனால் எப்போதுமே, அதிமுக அரசு தமிழகத்தில் அமைதி நிலைத்திட வேண்டும், வளர்ச்சி மேலோங்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு, “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவை சட்ட ரீதியாக அணுகுவோம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து மேலும் விமர்சிக்க முடியாது” என்றார் ஜெயலலிதா.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட பிரச்சாரப் பயணத் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, மார்ச் 3 முதல் ஏப்ரல் வரை அவர் தமிழகம் முழுவதும் முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!



ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை விசாரணை கூண்டில் நிறுத்தி முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய திறந்த மடல் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் அதிகாரத்திலும், அதிகாரத்தின் பல துறைகளிலும் எரிவாயு விலை உயர்விலும் முகேஷ் அம்பானியும் அவரின் நிறுவனமும் சேர்ந்து நடத்தும் தில்லுமுல்லுகளை பச்சையாக விசாரணை செய்கிறார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் கடித்தத்தின் முழு விவரம் வருமாறு:

பிரியமுள்ள முகேஷ் அம்பானிக்கு,

தாங்கள் சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக மான நஷ்டத்திற்கான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள் அல்லவா…

நானும் பிரசாந்த் பூஷனும் இணைந்து 2012ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியும் நவம்பர் 9ம் தேதியும் செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தினோம் என்பதா அவர்கள் செய்த தவறு?

எரிவாயு விலை உயர்விற்காக அரசின் மேல் தாங்கள் செலுத்தி வரும் முறையற்ற அழுத்தத்தினை குறித்து அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் நாங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவித்தோம்.

தங்களுக்கும், தங்களின் நிறுவனத்திற்கும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை குறித்து நாட்டு மக்களுக்கு நாங்கள் எடுத்துரைத்தோம்.

பல தொலைகாட்சி நிறுவனங்கள் அதனை நேரிடையாக மக்களுக்கு ஒளிபரப்பியது. இந்தத் தொலைகாட்சி நிறுவனங்களுக்கே தாங்கள் மான நஷ்டத்திற்கான வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருக்கிறீர்கள்.

நானும், பிரசாந்த் பூஷனும் தங்களை அவமானப்படுத்தினோம் என்று எண்ணுகீறீர்களா..? இல்லை… நீங்கள்தான் உண்மையான குற்றவாளி என்று நான் சொல்கிறேன்.

உங்களுக்கு நீங்களே ஒரு மான நஷ்டத்திற்கான வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொள்ளுங்கள். ஊடகங்களை உங்களின் பாத சேவை செய்பவர்களாக மாற்றி எடுக்க வேண்டும் என்பதற்கான ஓர் அத்தாட்சியே தங்களின் இந்த நடவடிக்கைகள்.

இந்த நிலையில் இந்திய திருநாட்டிலே வசிக்கும் குடிமக்கள் தங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறார்கள்.

இந்திய அரசுக்கு கிடைத்திருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் தாங்களுடைய பேரும் இடம் பெற்றிருப்பது உண்மைதான் என்று எண்ணுகிறீர்களா?

தாங்கள், தங்களின் உறவினர்கள், தங்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களின் பெயர்கள்? தங்களின் பேரில் 100 கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் இருந்தது உண்மைதானே? சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியல் வெளிவந்த போது தாங்கள் அந்தப் பணத்திற்கு வரி செலுத்தி விட்டீர்கள் என்பதற்க்கு ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா?

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உண்மை என்று தாங்கள் ஒப்புக்கொண்டால் இந்திய சட்டங்கள் அறிவுறுத்தும் தண்டனைக்கு தாங்கள் சிறையில் இருக்க வேண்டி வரும் அல்லவா?

ஆனால் ஒருபோதும் உங்களுக்கு எதிராக எவரும் வழக்கு தொடுக்க போவதில்லை. காரணம் நீங்கள் இந்தியாவின் ஆட்சி அதிகார மையத்தை அச்சுறுத்தி வைத்திருக்கிறீர்கள்.

சில பத்திரிக்கை செய்தியாளர்கள் சொல்கிறார்கள்… சோனியா காந்தி அவ்வவ்போது உங்களுடைய தனியார் விமானத்தில் பயணிக்கிறார், ஜெய்பால் ரெட்டியின் நிர்வாகத் துறை கூட தங்களின் ஆதிக்கத்தால் மாற்ற இயலுகிறது என்று.

காங்கிரஸை மட்டும் குற்றம் சொல்வது எப்படி? பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் உங்களின் பாக்கெட்டில் அல்லவா இருக்கிறார்கள்?

அத்வானி அவ்வப்போது சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தினை குறித்து கேள்வியை உயர்த்திக் கொண்டிருந்தார்.

ஆனால் தாங்களுடைய பெயர் வெளிவந்த பிறகு உங்களுடைய சுவிஸ் வங்கி கணக்குகளை குறித்து ஒரு வார்த்தை கூட பாஜக நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை.

அரசியல் கட்சிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உங்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் அல்லவா இது?

ஆனால் இந்திய மக்களுக்கு உங்களை எண்ணி பயப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் நம்முடைய நாடு விற்பனைக்கு உள்ளதல்ல. தங்களுக்கு அரசியல் கட்சிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் காசு எறிந்து விலைக்கு வாங்க இயலும். ஆனால் இம்மண்ணினை விற்க நாங்கள் அனுமதிக்க போவதில்லை. நான் உயர்த்தும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

தாங்களை நானோ, பிரசாந்த் பூஷனோ ஊடகங்களோ அவமானப்படுத்தினோமா? உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொண்டீர்கள்தானே?

1) 2002ல் ஒரு பங்கிற்கு 55 ரூபாய் விலை வரும் ஒரு கோடி பங்குகள் தாங்கள் பாஜக தலைவர் பிரமோத் மஹாஜனுக்கு கொடுத்தீர்கள் அல்லவா? அதுவும் கேவலம் 1 ரூபாய்க்கு. அது பக்காவான லஞ்சம்தானே?

அது குறித்து விமர்சனம் எழுந்த போது மஹாஜனுக்கு கொடுத்த பங்குகளை தாங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள்தானே?

எது எப்படியானாலும் அந்தச் சம்பவங்களை குறித்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. உண்மையில், நீங்கள் உங்களையே அசிங்கப்படுத்திக் கொண்டீர்கள்.

2) தாங்கள் 28 மாடி மாளிகை கட்டி உயர்த்தியது ‘வக்ஃப்’ வாரியத்தின் சொத்தில் அல்லவா? பாவப்பட்ட அநாதை இசுலாமிய சிறுவர்கள் தங்க வேண்டிய இடமல்லவா அது?

அநாதை குழந்தைகளின் இடத்தை தாங்கள் ஆக்கிரமித்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொண்டீர்கள்தானே?

3) 2000ம் ஆண்டு சில கேஸ் கிணறுகள் உங்களுக்கு தந்தது அதிலிருந்து கேஸ் எடுத்து நாட்டிற்குத் தருவதற்காகத்தானே? அது நாட்டிற்கு சொந்தமானதல்லவா? தாங்கள் வெறும் ஒரு குத்தகைக்காரர் மட்டுமே… ஆனால் தற்போது அந்த கேஸ் கிணறுகள் உங்களுக்கு சொந்தம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி உங்களுடைய பாக்கெட்டில்.

உங்களுடைய அழுத்தம் காரணமாக காங்கிரஸ் கேஸ் விலையை உயர்த்தியது. உங்களால் உப்பு முதல் கற்பூரம் வரையுள்ள பொருட்களுக்கு விலை உயர்ந்தது.

சகிக்க முடியாமல் பெட்ரோலியத்துறை அமைச்சர் கேள்வியை உயர்த்திய போது அவரை அந்தப் பதவியில் இருந்து நீங்கள் மாற்றினீர்கள்.

உங்களால் நாட்டில் உள்ள அனைத்து பொருட்களின் விலை ஏறியது. பெரும்பாலான வியாபாரிகளுக்கு நேர்மையாக வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே ஆசை. ஆனால் அதற்கு சந்தர்ப்பங்கள் ஒத்து வருவதில்லை. இது உங்களுக்கு அவமானமாக தோன்றவில்லையா? உங்களை குறித்து உங்களுக்கே அவமானமாக தோன்றவில்லையா?

பழைய காலம் எல்லாம் மாறிவிட்டது…  மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்… உங்கள் மேல் அச்சம் கொண்டு உங்களுக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள் எல்லாம் தங்களை திருத்திக்கொண்டு விட்டன. தற்போது அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களின் பங்களிப்பினை மேற்கொண்டு வருகிறார்கள்.

நீங்கள், நாட்டில் உள்ள சில ஊடகங்களில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்திருக்கலாம். ஆனால் நடுநிலையான நேர்மையான பத்திரிக்கையாளர்களை விலை கெடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.

என்ன உங்களின் கனவு? உலகின் முதல் பணக்காரன் ஆகவேண்டும் என்றா? இப்படி ஏமாற்றி பிழைத்து காசு உண்டாக்கி பணக்காரன் ஆனால் உங்கள் மனதிற்கு சமாதானம் கிடைக்குமா? பணம் குவிய குவிய மனதிற்கு சமாதானம் ஒரு போதும் கிடைக்காது.

தியாகங்களின் மூலமே மனம் சமாதானம் அடையும். மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி மக்களிடமிருந்து ஏமாற்றி எடுத்த காசுகளை நாட்டின் முன்னேற்றத்திற்கு செலவழித்தால்… இந்த நாடு என்றும் உங்களை நினைத்து பார்க்கும்.

மதிப்புடன்,

அரவிந்த் கெஜ்ரிவால்